Monday, January 17, 2011

பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’

“இத்துடன் எல்லா பாடமும் முடிச்சாச்சு. இனி நீ சென்ட்டம் எடுப்பது மட்டுமே பாக்கி” என்றார் என்னுடைய பிரத்யேக டியூசன் வாத்தியார்.

நானூறு பக்க லாங்-சைஸ் நோட்டில் ஸ்கேல் வைத்து அழகாக மூன்று கோடுகள் போட்டு ‘முற்றும்’ எழுதி, ஒரு குருவுக்கு உண்டான மரியாதையுடன் அவருக்கு நன்றி சொல்லி, ஆசி பெற்று, வீட்டிற்குப் புறப்படத் தயாரானேன்.

அந்த லாங்-சைஸ் நோட்டு என்னுடைய பிரதான பொக்கிஷம். அதை எடுத்துச் செல்ல தனியாக பேண்ட் துணி வாங்கி, நோட்டின் சைஸூக்கு ஜிப்புடன் ஒரு பை தைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அப்போது நான் சுவாசித்த காற்றிலிருந்த ஈரம், மழை பெய்ந்து ஓய்ந்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

நோட்டை இரண்டு பாலித்தீன் பைகளால் வாட்டர்-ப்ரூஃப் செய்துகொண்டு, பேண்ட்டை(பையை) அதற்கு அணிவித்து, அதை என்னுடைய  டி.வி.எஸ் சேம்ப்-பின் ஹேண்டில் பார் கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

அடைமழை கொட்டி இருந்திருக்கிறது. கட்டிடங்களும், காற்றும் மழையில் நினைந்திருந்தன. வீதிகள்தோறும் நீரோட்டம்.

டி.வி.எஸ் சேம்ப்பில் அப்போதுதான் எலட்ரானிக்-ஸ்டார்ட் அறிமுகமாகியிருந்தது. அந்தக் காலத்தில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டி.வி.எஸ்-50கள் ஆங்காங்கே நின்று ஸ்டார்ட் ஆகாமல் முனகிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து, நான் ராசா(!) மிடுக்கோடு காஞ்சி ராஜவீதியில் சென்று கொண்டிருந்தேன். ராஜவீதி, சாண் உயர நீர்வீதியாக இருந்தது. சர்வ ஜாக்கிரதையாகத்தான் வண்டி ஓட்டினேன். ஆனாலும்...

டொடுக் என்ற சப்தத்துடன் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் பயங்கரமாக இறங்கியது. முழு பிரேக்கையும் பிடித்தேன். வண்டி நிற்கவில்லை. திமிங்கிலம் விழுங்குவது போல எதனாலோ என் வண்டி கீழ் நோக்கி இழுக்கப் பட்டது. காலூன்ற முயன்றேன். பயங்கர அதிர்ச்சி. தரை தட்டுபடவே இல்லை. காலும் கீழே போய்க்கொண்டிருந்தது.

பட்டெனப் புரிந்தது. கடவுளே! திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில், நான் வண்டியுடன் செங்குத்தாக கீழிறங்கிக் கொண்டிருந்தேன்.

வண்டி உரசிக்கொண்டே சப்தம் எழுப்ப, உடல் முட்டிகள் எதனெதனுடனோ இடிபட, கண்கள் இருட்டிக் கொண்டன. அது பயத்தினாலா? நீரின் நிறத்தினாலா?  அது அந்தச் சாக்கடைக்கே வெளிச்சம்!

“தூக்கு அவன” என்ற குரலைத் தொடர்ந்து திமுதிமுவென நாலைந்து பேர் ஓடி வரும் காலடியோசைக் கேட்டது. அவர்கள் என் தலையைப் பிடித்து, பின் கைகளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிலத்தில் நிறுத்தினார்கள்.

ஒரு கணம் நின்றுவிட்ட உயிர்நாடி மீண்டும் துடிக்கத்தொடங்க, பெருமூச்சு விட்டேன்.

பாதாள சாக்கடையை எதற்காகவோ நான்கு சதுரடிக்கு வெட்டி அப்படியே விட்டு விட்டார்கள். எமகாதகர்கள். வண்டியின் பின் சக்கரம் மட்டுமே தரைக்கு மேல் இருந்தது. அது மெதுவாக ரிவர்ஸில் சுத்திக் கொண்டிருந்தது. பின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்து என் முகத்தில் சிவப்பொளியைப் பாய்ச்சியது. (நம்பியார் முறைக்கும் போது அவர் முகத்திற்கு ஒரு ரெட்லைட் எஃபெக்ட் கொடுப்பார்களே, அது மாதிரி.)

வண்டியையும் மீட்டார்கள். முன் பகுதி சற்று நசுங்கியிருக்க, ஹேண்டில் பார் அஷ்ட கோணலாக வளைந்திருந்தது.

“ஏன் தம்பி, ஒரு கொம்ப நட்டு, செவப்பு கொடி வச்சிருக்குல்ல. பாத்து வரப்படாது?” ஒருவர் கடிந்துக் கொண்டார். அவருக்கு சாலை ஓரத்தைச் சுட்டினேன். பத்தடிக்கு ஒன்றாய் வரிசையாக கட்சிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.

‘இதுவும் ஒரு கட்சிக் கொடி. கொஞ்சம் நடு ரோட்டுல நட்டுட்டாங்கனு நெனச்சு, நான் பாட்டுக்கு வந்துட்டேன் சார்’ அப்பிராணியாகச் சொன்னேன். (நம்ம ஊர் எல்லா கட்சிக் கொடிகளிலும்தான் சிவப்பு ஒளிருதே!)

அவர் தலையில் அடித்து கொண்டு, “சரி சரி, போய் குளி” என்றார். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் ஊரில் “செங்கழு நீரோடை வீதி” என்று ஒரு பிரபலமான வீதி உண்டு. ஆனால் இது என்ன கழுநீர் ஓடையோ?  அதில் தலைமூழ்கி எழுந்ததில் கார்மேக வண்ணனாகக் காட்சியளித்தேன். தார் வண்ணன் என்றும் சொல்லலாம். அவ்வளவு கருப்பு.

ஒருவாறு சமாளித்து வண்டியைக் கிளப்பினேன். என்னுடல் துர்வாசனையை நாசியால் தாங்க முடியவில்லை. “சே! நம்ம கதாநாயகர்கள் சாக்கடை வழியாக, கவர்னர் / மந்திரி வீட்டுக்குள் நுழைவது, ஹீரோயினை அனாயாசமாக தூக்கிக் கொண்டு வருவது, உள்ளேயே வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுவது எல்லாம் எவ்வளவு பெரிய கப்சா?!!” என்று அந்த நிலையிலும் யோசித்தேன்.

என்னிலையை கண்டு பொறுக்காத கார்மேகம் மீண்டும் அடைமழையைக் கொட்டி என்னை குளிப்பாட்டியது(!). வீதி வெறிச்சோடியதால், வண்டியை நிறுத்தி, நடு ரோட்டில் உடம்பை தேய்த்துவிட்டு ஆனந்தமாகக் குளித்தேன் (டிரஸ்சோடுதான்)!

மீண்டும் பால்வண்ணனாக மாறிய சந்தோசத்தில், ஈரம் சொட்டச்சொட்ட வீடு வந்து சேர்ந்தேன். மரணச் சாக்கடையை முத்தமிட்டுத் திரும்பியவன் என எண்ணிக் கொண்டே, வண்டியை ஸ்டேண்ட் போட்டு, ஹேண்டில் பாரைப் பார்த்த நான் துல்லியமாய் அதிர்ந்தேன்...

பேண்ட் போட்ட என் ‘மேத்தமேட்டிக்ஸ்’ நோட்டைக் காணோம்.

4 comments:

  1. உங்க நிலமையே இப்படின்னா அந்த மேத்தமேட்டிக்ஸ் நோட்டின் நிலமையை எண்ணிப்பார்த்தேன். இப்ப எங்கேயோ ? ஆனா சேப்டியாதான் இருக்கும் இல்லையா.

    ReplyDelete
  2. Appa.. karuppu vellai kuliyal ah? Good that you escaped unhurt!

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...