Wednesday, October 28, 2015

பாலகுமாரனின் ஒரு காதல் நிவந்தம் - விமர்சனம்

தந்தையின் புத்தக அலமாரி.

ஒரு புத்தகத்தைத் தேடும் போது, கண்ணில் பட்டது பாலகுமாரனின் மாத நாவல் ‘ஒரு காதல் நிவந்தம்’. படித்ததில்லை. ஆனால் அது இராஜேந்திரனைப் பற்றியது எனத் தெரியும். அழகிய தலைப்பு சொல்லியது, இது இராஜேந்திரனுக்கும், அவனது அனுக்கி நக்கன் பரவைக்கும் உள்ள பிணைப்பு என்று. படிக்கும் ஆசை வர, உடன் தயக்கமும் ஒட்டிக் கொண்டது.

உடையார், கங்கை கொண்ட சோழன் தந்த பிம்பத்தை, உணர்ச்சிகளை இது கலைத்து விடுமோ? 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சம்பவங்கள் மாறியிருக்கும். பாத்திரங்களின் பிம்பங்கள் கூட உருமாறியிருக்கும்.

நாவல் கடிகை ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸன், பரமேஸ்வரனே கதா நாயகர்கள்.

இருப்பினும் மனம் உந்த, படித்தேன்.

ஆம், சம்பவங்கள் மாறியே இருந்தன. கங்கை வரை வென்ற பிறகும், கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சுவடே இல்லை. இராஜராஜ சோழனின் அனுக்கி பஞ்சவன் மாதேவி இன்னமும் நலமுடன் இருக்கிறாள். கங்கைக்கு முன் சாளுக்கிய தேசத்தை நோக்கிய படையெடுப்பின் போதே, இராஜேந்திரனின் மகன்கள், சேர, பாண்டிய, ஈழ தேசங்களை ஆளத் தொடங்கியிருப்பார்கள். இங்கே இவர்கள் சிறுவராய்த் தெரிகிறார்கள். உடையாரில் தந்தையுடனான நீண்ட உரையாடலில் பலதும் உணர்ந்திடும் இராஜேந்திரன், இங்கே இன்னமும் பக்குவப்படவில்லை. நக்கன் பரவையின் அறிமுகமே இனிதான் நடக்கிறது. இப்படிச் சில.

ஆனாலும் பாதகமில்லை. கதையின் கரு அட்டகாசம். கடந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம்... பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான். 

யுத்ததின் வலியை, அதன் நாசம் பெண்களிடம் விதைக்கும் வேதனையை குந்தவை, பரவை மூலம் இராஜேந்திரனுக்கு உணர்த்த முயல்வதே களம்.

பலதும் அறிந்திருந்தும், ஒப்பற்ற நிர்வாகத் திறமையிருந்தும், வெற்றி மட்டுமே கண்டவனெனினும், அவன் செயல்களுக்கு வேறொரு கோணத்தில் பாதக முகமுண்டு என்பதை இராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, படிப்பவருக்கும் புரியவைக்கிறார் பாலகுமாரன். கூடவே சில பாடங்களும் நயமாகக் கிடைக்கின்றன.

மூன்று சோழ அரசர்களுக்கு முதல் அமைச்சராய், சேனாதிபதியாய் இருப்பவர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். சபையில் தன் வருகைக்கு எழுந்திருக்க வேண்டாமே என இராஜேந்திரன் வேண்ட...

“ஒரு நாள் உமது மகன் ராஜாதிராஜன் அரியணை ஏறி சபை வரினும் நாம் எழுந்து நிற்போம். அரசனை அதிகாரி மதிக்கவில்லையெனில் அதிகாரியை குடி படை மதிக்காது. வளையாத மூங்கில் வில்லாகாது”

அதைப் போல தளிச்சேரிப் பெண் சரபை. “உண்பதும் உடுப்பதும் சோழர் சொத்து, எனக்கும் நன்றிக் கடன் உண்டல்லவா?” எனத் தாமாக அரச குடும்பச் சிக்கலுக்கு உதவ முன் வருகிறாள்.

ம்ம், பணிவும், மரியாதையும், நன்றிக் கடனும் இருப்பின் சாம்ராஜ்யமே சீராக இயங்கும். இவை நீர்ப்பின், ஒரு வீட்டின் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும்.

- எவன் மனதிற்குள் சஞ்சலமின்றி அமைதியோடு இருக்கிறானோ அவனே வீரன்

- ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது

- கோபத்தை விட கேடான விஷயம் எதுவுமில்லை

- தான் என்ற அகம்பாவம் அற்றவர், கற்றல் எளிது

- கூட்டமின்றி, கோலாகலமின்றி, சாமானியனாய் இருப்பது விடுதலையாய் இருக்கிறது

- வளர்ச்சியைச் சொல்வதே ஆன்றோர் புத்தி

இப்படி பல ஒற்றை வரிகள் நாவலில் பளிச்சிடுகின்றன. ஆசிரியரின் அனுமானங்களும் முறுவலைத் தருகின்றன.

மனைவிக்குப் பயந்து, அலுவலகத்தில் நடுநிசி வரை உழைக்கும் (நெட்டில் படம் பார்ப்பதுதான்) கணவர்கள் இன்று சகஜம்தானே. மனைவிகளின், சிற்றனைகளின் இம்சையைத் தவிர்க்கத்தான் இராஜேந்திரன் கங்கைவரை சென்று விட்டானாம் :)

பரவை, ‘அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையோம்..’ என பாரி மகளிரின் கவிதையைச் சொல்லி, போரின் கொடுமையை விளக்க, படிக்கும் நமக்கும், எதற்கு இந்தச் சண்டை என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.

இந்த நாவலில் ஒரே ஒரு பிழை. திருவாரூரில் இராஜராஜனும், அவன் சேனாதிபதி அருண்மொழியும் மாறு வேடத்தில், பரஞ்சோதி, நம்பி என்ற மாற்றுப் பெயர்களில் இருக்கிறார்கள். இது தனக்கு தெரியாது என்றே பரவை இராஜேந்திரனிடம் பழகுகிறாள். மன்னராய் வெளிப்படும் முந்தின தினமே அருண்மொழி என்ற பெயரை இருவருமே பயன்படுத்தி விட்டார்கள்!

திருவாரூரில் பெரும் வெள்ளம் ஏற்பட, கடைசி பகுதியை அற்புதமாய் முடித்திருக்கிறார் பாலகுமாரன். இது படித்து உணர வேண்டிய அனுபவம். செங்கல் தளியாய் இருக்கும், வீதி விடங்கர், தியாகேசர் கோவில் கற்றளியாய் மாற்றும் உபயம் இங்குதான் பரவையால் விதைக்கப்படுகிறது. முடிவில் அவள் இராஜேந்திரனிடம் சொல்லும் ஒரு வாக்கியம்...

‘நீங்கள் தூசு ஒட்டிக் கிடந்த மாணிக்கம். சற்று துடைத்தேன். மாணிக்கம் தானாய் பிரகாசிக்கிறது’

உடையார், கங்கை கொண்ட சோழன் பிரம்மாண்ட கதைகளுக்கு, இந்நாவல் ஒரு டீஸர்.

நன்றி ஐயா (பாலகுமாரன்).

Wednesday, August 5, 2015

குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?

நண்பனின் வீடு. அவன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவம்.

‘நவநீத்’ என்று பெயர் சூட்டப்பட திகைத்தேன்.

நவநீதம் என்றால் (புது)வெண்ணெய். அதை விரும்பி உண்டதால், உண்டவனுக்கு ஏற்பட்ட காரணப் பெயர் நவநீத கிருஷ்ணன்.

அதை இப்படி சுருக்கிவிட்டதால் குழந்தையை ‘வெண்ண... வெண்ண...’ என்றல்லவா அழைப்போம்.

பெயர் ஸ்டைலாக, மாடர்னாக இருப்பதற்காகச் சுருக்கும் போது அதன் அர்த்தம் சிதைகிறது.

உதாரணங்கள்: நரேன், விஸ்வம்.

இந்திரன் என்றால் அரசன். தேவர்களின் அரசன் தேவேந்திரன். மனிதர்களின் அரசன் நரேந்திரன். (பிரதமரின் பெயரும் நரேந்திரர்தானே!)

விஸ்வம் என்றால் உலகம். அதன் அதிபதி விஸ்வநாதன். தமிழில் உலகநாதன்.

சுருக்கியதும் மனிதன் (நரேன்), உலகம் (விஸ்வம்) என்று பொருள் மாறி வருகிறதே தவிர, இதில் அழைப்பே தொனிக்கவில்லையே. (ஓ குழந்தைதான் அவர்களின் உலகம் என்பதால், அப்படி பெயர் வைக்கிறார்களோ!).

பெயர் வைப்பதன் பிரதான நோக்கமே அழைப்பதற்குத்தானே!

இறைவனின் பெயர்களைப் பாருங்கள்: சிவன், கணேசன், முருகன், ராமன். கண்ணன்... அழைக்கும் போது சிவா, கணேசா, முருகா, ராமா, கண்ணா...

கடைசி எழுத்தில் ‘ஆ’ என்ற நெடில் வருவதால்... அன்புக்காக, ஆசைக்காக, அவசரத்திற்காக, ஆபத்திற்காக... எந்தத் தொனியிலும் பெயர்களைக் கூவி அழைக்கலாம்.

உகரமும் சிறப்பு: விஷ்ணு. பெண்களுக்கு இகரம்: பார்வதி, லஷ்மி, சரஸ்வதி, அபிராமி, காயத்ரி. இகர, உகர ஒலியை எப்படி வேண்டுமானாலும் நீட்டலாம். அபிராமீமீமீ... என்று மனமுருகியும் அழைக்கலாம்.

ஸ்டைலாக ‘த்’-ல் முடித்தால் (நவநீத், அஸ்வத்) வேகமாக எழும் அழைப்பொலி கடைசி எழுத்தில் முழுங்கப்பட்டு நம்மிடமே நின்றுவிடும். பலர் திரும்பாமல் போவதற்கு, அழைப்பொலி காற்றில் பரவி அவர்களை எட்டாததும் ஒரு காரணம். (கண்டுக்காம போறவங்க வேற ரகம்!).

பெயரைச் சுருக்காமல் வைத்தாலும், இருபெயராக வரும் காரணப் பெயர்களில் வேறோரு சிக்கலும் இருக்கிறது. முருகனை, சிவ குமாரா என்று விளிப்பதை வைத்து, ஒருவனுக்கு சிவகுமார் என்று பெயரிட்டால், பெரும்பாலும் சிவா என்றே, முதல் பாதி பெயரால் அவனை அழைப்பார்கள். முருகனாக இருக்க வேண்டியவன் சிவனாகி விடுவான்! இறைவனை சிறுவனாக பாவிக்கையில் பாலமுருகா, பாலகிருஷ்ணா என்று அழைக்கிறோம். இதை பெயராகக் கொண்டவனை (அவன் பெரியவனான பிறகும்... எல்லோராலும்...) பாலா பாலா... பையா பையா...என்றே அழைக்கப்படுவான்.

அர்த்தம் பொதிந்த பெயர்களை சிதைய விடாதீர்.

திடீரென தமிழ்ப் பற்று பொங்கிட,  ஒரு நண்பன், தன் பெண் குழந்தைக்கு வண்டார்குழலி என்று பெயர் வைத்து விட்டான். பின்னாளில் பள்ளியில் மாணவர்களால் கேலிக்கு ஆளாகி, அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா?

ஆக, பெயர் வைக்கும் அடிப்படை:

1) அழைப்பு தொனிக்க வேண்டும்
2) அர்த்தம் மாறாதிருக்க வேண்டும்
3) கடைசி எழுத்தொலி நீள வேண்டும்

செல்லப் பெயர்கள் அழைப்பவருக்குச் சந்தோஷம். நல்ல பெயர்கள் அழைக்கப்படுபவருக்குச் சந்தோஷம். இரண்டையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளுதல் இருவருக்கும் பரம சந்தோஷம்.

Thursday, July 30, 2015

இனி முளைக்கட்டும் அக்னிச் சிறகுகள்!












(திரு. அப்துல் கலாம், ஜனாதிபதியாகப் பதவி
ஏற்ற போது, அவருக்கு அனுப்பிய கவிதை)

ஓயாத கடலலைகள்,
தாளமிடும் கரையினில்,
சத்திய உள்ளமுடன்,
கருணை வெள்ளமுடன்,
நித்திய ஊக்கமுடன்,
இடையறா உழைப்புடன்,
பிறந்து - நீர்
இன்றமரும் பதவி,

முப்படைத் தளபதிகளும்,
முதல் மரியாதை செலுத்தும்,
மூத்த பதவி.

நாற்பது ஆண்டுகளாய்,
மெய் வடித்த சாதனைகளால்,
பாரத வானை,
கோள்கள் வலமிட வைத்து,
ராணுவத் தூணியில்,
ஏவுகணைகள் நிரப்பியபின்,
இன்று நீர்,
முதல் குடிமகனாவதில்,

படித்தவர்க்கு ஆனந்தம்!
பாமரர்க்கோ பேரானந்தம்!

பிரதி தினமும் நீரோதும்,
குரானின் ஒலிகளும்,
கீதையின் வரிகளும்,
மதங்கள், தவறி வகுத்திட்ட
எல்லைகளை இணைக்கட்டும்!

தன்னலமற்ற உம் சேவைக் கண்டு,
கட்சிகள் ஓரணி ஆகட்டும்!
உம் தாயக விசுவாசம் கண்டு,
ஆயுதமேந்திய கைகள்,
தவறுணர்ந்து பணியட்டும்!

இனி உம்
ஒவ்வொரு அசைவினிலும்,
மாணவர் விஞ்ஞானம் படிக்கட்டும்!
நீர் மீட்டும் வீணையின் இசையில்,
மெய்ஞானம் கற்கட்டும்!

இனி ஒவ்வொரு
இந்தியனுக்கும் முளைக்கட்டும்,
அக்னிச் சிறகுகள்.
மெய்ப்படட்டும் உம் இந்தியக் கனவு!

இனி நிகழட்டும்,
எங்கு காணினும் வளர்ச்சி!
எவரிடம் காணினும் மலர்ச்சி!
எங்கு சென்றிடினும் செழிப்பு!
எவரிடம் பேசிடினும் நட்பு!

இனி பாரதம்,
மக்களுக்கு ஒரு நல்லரசாகட்டும்!
உலகினில் பெரும் வல்லரசாகட்டும்!

-- காஞ்சி ரகுராம்

Friday, July 10, 2015

பொன்னியின் செல்வன் நாடகம் - விமர்சனம்

‘நீங்க நெஜ வந்தியத் தேவரா’ - என் மகன் கேட்டான்.

‘இல்லை தம்பி, வந்தியத் தேவரா நடிக்கிறேன்’ - அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இடம்: மியூசிக் அகாடமி. SS International, Magic Lantern Theatre-இன் பொன்னியின் செல்வன் நாடகம்.


இன்று ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றாலே... நீளமா இருக்கு, ஸ்லோவா போகுது என்ற எண்ணங்கள் ஊன்றிவிட்ட நிலையில்...

மூன்று மணி நேரம் கடந்தும், சுவாரஸ்யக் குறைவின்றி நாடகம் தொடர்ந்தது. ஆனால் இரவு 9 மணியைக் கடந்து விட்டதால், மகனை கேன்டீனுக்கு அழைத்து வர, அங்கே வந்தியத்தேவன்.

‘எனக்கு டிவெண்டி மினிட்ஸ் பிரேக், அந்த கேப்ல நானும் சாப்பிட வந்துட்டேன்’ என்னிடம் சொன்னவர், மகனிடம் தொடர்ந்தார். ‘சீக்கிரம் சாப்ட்டு உள்ள போ தம்பி, யானையெல்லாம் வரும்’

அவர் ஒரு நாடகக் கலைஞர் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. அசல் வல்லவராயன் வந்தியத்தேவராகவே காட்சி தந்தார்.

அறுபது வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய அமர காவியம். ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், அருண்மொழி, குந்தவை... போன்ற சரித்திரப் பாத்திரங்களை, படிப்பவர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருத வைத்தது, கல்கியின் உயிரோட்ட வரிகள் என்றால், அவர்களின் பிம்பங்களை மனதில் பதிய வைத்தவை மணியமின் அற்புத ஓவியங்கள். அதன் வடிவங்களை ஒட்டியே நாடகப் பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்தது, Magic Lantern Theatre-இன் முதல் மாஸ்டர் ஸ்ரோக்.

ஓவியங்களுக்கு ஏற்றவாறு முகம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கடும் பயிற்சி தந்து, உடற்கட்டையும் வளர்த்து ஒப்பனை செய்தது பலருக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. குறிப்பாக, குந்தவையின் மேல் நோக்கும் கொண்டை, ஆழ்வார்க்கடியானின் முன் குடுமி, அருண்மொழியின் தலைப்பாகை, வந்தியத்தேவனின் அலைபாயும் கேசம், அரும்பு/குறும்பு மீசை... இன்னும் பலப்பல.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள் அற்புதம். பின்னணி இசையும் பிரமாதம். தடியைச் சுழற்றியபடி ஆழ்வார்க்கடியான் நுழைந்த போது அரங்கம் கலகலத்தது. வந்தியத்தேவனும், அருண்மொழியும் தோன்றிய போது புது உற்சாகம் வந்தது. அதற்கு மாறாக உக்கிரமாய் நுழைந்த கரிகாலனின் தோற்றமும், வேகமும் அதற்கேற்ற பின்னணி இசையும், ஒரு மிரட்சியையும், திகைப்பையும், பெருமிதத்தையும் தந்தன.

நாவலை பலமுறை ஊன்றிப் படித்து, அந்தந்த பாத்திரங்களாகவே கலைஞர்கள் தங்களை சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அருண்மொழிக்கே அதிக பொறுப்பு. நாவலைப் படிக்காத பாமரனின் உள்ளங்களிலும் வாழும் மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமைப் பருவமது. அதற்குரிய கண்ணியம், கம்பீரம், வீரம், தீட்சண்யத்தை கண்ணசைவில், முக பாவத்தில், உடல் மொழியில், ராஜ நடையில் வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கலைஞர் பிரமாதப்படுத்தி விட்டார்.

கோட்டை வாயிலில் யானைப் பாகனாய் முக்காடிட்டு, வானதியை அழைத்து வரும் காட்சி... கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் பெரிய வேளாளர் வானதியை வெட்ட வாளை ஓங்க, அதை தன் வாளால் தடுத்து வீழ்த்தியபின், முக்காட்டைக் களைந்து தான் அருண்மொழியென வெளிப்படுத்திய சமயம்... எதிர்பாராத விதமாய் தலைப்பாகை கழன்று முதுகில் தொங்கியது. சற்றும் அசராமல், தீ விழிகளுடன், கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளை பேசியபடியே, பாகையை எடுத்து, படு கம்பீரமாய்ப் பொருத்தி நின்ற ராஜதோரணையே அந்தக் கலைஞரின் அர்ப்பணிப்பை பறை சாற்றும்.

ஓகே கண்மணி திரைப்படக் காட்சிகள் கூட தூண்டாத காதலுணர்வை, குந்தவை வந்தியத்தேவனின் சந்திப்பு கிளறுகிறது. கண்கள் கலந்த நொடியே அவர்கள் ஸ்தம்பித்து நிற்பதும், வந்தியத்தேவன் இலங்கைக்குக் கிளம்பும் போது, குந்தவையின் பின்னே காதருகே மென்மையாய் ‘வருகிறேன்’ என்றதும் அவள் உடல் சிலிர்ப்பதும், அவர் பத்தடி சென்றபின் திரும்பி உடலுருக, முகமலர, கண்ணில் காதல் பெருக சில கணம் நின்று பார்த்தபின் விரைந்த போது, கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். ஐந்து பாக நாவலை 4 மணி நேரத்திற்கு அழகாகச் சுருக்கி நாடகமாக்கியிருக்கிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு, நல்ல தமிழ் உச்சரிப்பைக் கேட்டது காதிற்கு இனிமை.

சிலம்பு வீச்சும், சிறு சிறு வாட்போர்களும், இரு கைகளாலும் வாட்களை கரகரவென சுழற்றும் காட்சிகளும் நன்று. இடையில் வாளுறையைத் தரிக்காமல், ஒரு வளையம் போன்றதைக் கட்டியிருக்கிறார்கள். இதனால் அதிலிருந்து வாளை உருவுவதில் இருக்கும் கம்பீரம், மீண்டும் அந்த வளையத்தை சரியாகப் பிடித்து வாளைச் சொருகும்போது இல்லை. இவ்விடத்தை சற்று கவனிக்கலாம்.

தோட்டா தரணியின் பிரதான செட்டும், அதிலேயே செய்யும் சிறு மாற்றங்களும் அழகு. ஆனால் சிறு வயதில் மனோகரின் புராண நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். காட்சிகளுக்கு ஏற்ப, சபை, வீதி, காடு என் முழுமையாய் மாறும் செட்கள் இதில் இல்லாதது சிறு குறையே.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். நந்தினியே ஊமைப் பெண்ணாகவும் வருகிறார். தேவராளனே பார்த்திபேந்திர பல்லவன். ஆனால் ஆழ்வார்க்கடியானே ஜோதிடராய் வருவது ஒட்டவில்லை. இதைத் தவிர்க்கலாம்.

பெரிய பழுவேட்டரையர். கதைகேற்றபடியே வயோதிகம். ஆனால் கனைப்பும், கர்ஜனையும் பிரமாதம். ‘பராசக்தீ... சோழ தேசத்தைக் காப்பாற்று’ எனக் கூவி, உடல் துடிக்க உயிர்விடும் நடிப்பில் அரங்கே சிலிர்த்தது. (சோழர்குல தெய்வமான நிசும்பசூதனியைத்தான் பராசக்தீ என்பது போன்ற பெயரில் அழைத்தார்)

முதலை, யானை வேட தந்திரங்கள் குழந்தைகளை குஷி படுத்துகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட, இந்த நாடகமும் குழுவும் மேன்மேலும் வளர வேண்டும்.

இவர்களையும், பிற பாத்திரங்களையும் குறிப்பாக நந்தினியைப் பற்றியும் பலவாறு சிறப்பித்துச் சொல்லலாம். ஆனால் ஒரே வரியில் முடிக்கிறேன். வெளியே வரும் போது, என் ஐந்து வயது மகன் கேட்கிறான்...

‘இன்னோரு வாட்டி பாக்கலாமாப்பா’

சுட்டிகள்: