Thursday, July 30, 2015

இனி முளைக்கட்டும் அக்னிச் சிறகுகள்!












(திரு. அப்துல் கலாம், ஜனாதிபதியாகப் பதவி
ஏற்ற போது, அவருக்கு அனுப்பிய கவிதை)

ஓயாத கடலலைகள்,
தாளமிடும் கரையினில்,
சத்திய உள்ளமுடன்,
கருணை வெள்ளமுடன்,
நித்திய ஊக்கமுடன்,
இடையறா உழைப்புடன்,
பிறந்து - நீர்
இன்றமரும் பதவி,

முப்படைத் தளபதிகளும்,
முதல் மரியாதை செலுத்தும்,
மூத்த பதவி.

நாற்பது ஆண்டுகளாய்,
மெய் வடித்த சாதனைகளால்,
பாரத வானை,
கோள்கள் வலமிட வைத்து,
ராணுவத் தூணியில்,
ஏவுகணைகள் நிரப்பியபின்,
இன்று நீர்,
முதல் குடிமகனாவதில்,

படித்தவர்க்கு ஆனந்தம்!
பாமரர்க்கோ பேரானந்தம்!

பிரதி தினமும் நீரோதும்,
குரானின் ஒலிகளும்,
கீதையின் வரிகளும்,
மதங்கள், தவறி வகுத்திட்ட
எல்லைகளை இணைக்கட்டும்!

தன்னலமற்ற உம் சேவைக் கண்டு,
கட்சிகள் ஓரணி ஆகட்டும்!
உம் தாயக விசுவாசம் கண்டு,
ஆயுதமேந்திய கைகள்,
தவறுணர்ந்து பணியட்டும்!

இனி உம்
ஒவ்வொரு அசைவினிலும்,
மாணவர் விஞ்ஞானம் படிக்கட்டும்!
நீர் மீட்டும் வீணையின் இசையில்,
மெய்ஞானம் கற்கட்டும்!

இனி ஒவ்வொரு
இந்தியனுக்கும் முளைக்கட்டும்,
அக்னிச் சிறகுகள்.
மெய்ப்படட்டும் உம் இந்தியக் கனவு!

இனி நிகழட்டும்,
எங்கு காணினும் வளர்ச்சி!
எவரிடம் காணினும் மலர்ச்சி!
எங்கு சென்றிடினும் செழிப்பு!
எவரிடம் பேசிடினும் நட்பு!

இனி பாரதம்,
மக்களுக்கு ஒரு நல்லரசாகட்டும்!
உலகினில் பெரும் வல்லரசாகட்டும்!

-- காஞ்சி ரகுராம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...